2-வது ODI-யில் பாக்., அபார வெற்றி
தெ.ஆ.,வுக்கு எதிரான தொடரையும் வென்றது

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் 2-0 எனக் கைப்பற்றிய அசத்தி இருக்கிறது.
தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. நேற்று 2-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார். சைம் அயூப் (25) அடித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசம் (73), கேப்டன் முகமது ரிஸ்வான் (80) நம்பிக்கை தந்தனர். அபாரமாக ஆடிய கம்ரான் குலாம் 32 பந்தில், 63 ரன்கள் (5 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார். இறுதியில் 49.5 ஓவரில் 329 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல்-அவுட்டானது. தென் ஆப்ரிக்கா தரப்பில் 18 வயது இளம் வீரர் மபாகா 4 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு, டி ஜோர்ஜி (34), வான் டெர் துசென் (23), மார்க்ரம் (21) ரன்கள் அடித்தனர். கிளாசன் (97) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இறுதியில் 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா ஆல் அவுட்டாகி, 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் அப்ரிதி 4, நசீம் ஷா 3, அப்ரார் அகமது 2 விக்கெட் சாய்த்தனர். இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான். இதன்மூலம் முதலில் நடந்த டி-20 தொடரை தென் ஆப்ரிக்கா வென்றதற்கும் பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்காக தனி ஆளாக போராடிய கிளாசன் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடும் விரக்தியில் ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்தார் கிளாசன். இந்த சம்பவம் பற்றி கள நடுவர், ஐ.சி.சி.-யிடம் முறையிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி., விதிமுறை 2.2-ஐ மீறிய கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு கரும்புள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளது. தமது தவறை கிளாசனும் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.








