மாணவி பாலியல் விவகாரம்.. விதிகளில் அதிரடி மாற்றம்..

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதி விதிகளில் மாற்றம்
பாலியல் விவகாரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகளும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விடுதி விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
நேரக் கட்டுப்பாடு
அண்ணா பல்கலைக்கழக விடுதியில், இதற்கு முன் இரவு 8.30 மணி வரைக்கும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மாலை 6:30 மணிக்கு மாணவர்கள் விடுதியில் இருக்க வேண்டும் என்கின்ற வகையில், விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடுதிக்கு தாமதமாக வரநேரிட்டல் முன்கூட்டியே விடுதி வார்டனிடம் தகவல் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழு அமைப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கிண்டி பொறியியல் கல்லூரி (Collage Of Engineering In Guindy) முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உள் புகார் குழு இயக்குனர் பிரேமலதா, பாடத்திட்ட மைய இயக்குனர் பேராசிரியர் குமரேசன், மாணவர் விவகார மைய இயக்குனர் பாஸ்கரன், கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜன் ஆகியோர், இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், அரசாணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.






