மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கவும்
பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது நினைவுகளைப் போற்றவும், அவரின் நீடித்த பெருமையை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே நினைவிடம் அமைப்பது, அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினால் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார் மன்மோகன் சிங்.

எனவே டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, அவரது இறுதிச் சடங்குகள் நடக்கும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவதாக மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மேலும் காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.







