மே.இ.தீவுகளின் சுழலில் சிக்கி சுருண்டது பாகிஸ்தான்
மூன்றே நாட்களுக்குள் முடிவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட்

முல்தான், ஜன.27; முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 163 ரன்களும், பாகிஸ்தான் 154 ரன்களும் எடுத்தன. 9 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்த நிலையில்,மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்கு

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு 254 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரு அணியினரும் சுழற்பந்து வீச்சில் மிரட்டிய நிலையில், கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.
சுழலில் சிக்கி சிதைந்த பாகிஸ்தான் அணி

மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சுக்கு இரையாகி 133 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் அவ்வணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் குடகேஷ் மோட்டி, கெவின் சின்க்ளேர், ஜோமெல் வாரிக்கன் ஆகிய மூவர் மட்டுமே பந்துவீசி, அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்த டெஸ்ட்

ஜோமெல் வாரிக்கன் 16 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவருக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்திய இப்போட்டி, மூன்றே நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பின் மே.இ.தீவுகள் வெற்றி

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருப்பதால், இவ்வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் பெருமகிழ்வுடன் கொண்டாடினர்.
முன்னதாக முல்தான் மைதானத்திலேயே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.







