காசாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதலில் 65 பேர் பலி
போரை நிறுத்த முடியாது என நெதன்யாகு திட்டவட்டம்

காசா, மே.15; காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலியப் படைகள் காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. நள்ளிரவு முதல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் துருப்புகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் மட்டும் 45 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 மாத முற்றுகையை நீக்க 3 நாடுகள் வலியுறுத்தல்

இதுபோன்ற சூழலில், காசாவில் உதவி விநியோகிப்பதற்கான அமெரிக்கா – இஸ்ரேலின் திட்டத்தை ரஷ்யா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. அதற்கு பதிலாக காசா மீதான இரண்டு மாத முற்றுகையை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, சௌதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காசா மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர பாடுபடுவேன் எனக் கூறியிருந்ததால், அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

ஆனால், “போரை நிறுத்தும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், நிலைமை சிக்கலாகி உள்ளது.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான ஆயுதக்குழுக்கள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
53,000 பேர் உயிரிழப்பு; 1,20,000 பேர் காயம்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 53,000 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் காயமடைந்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.







