தலைமைப் பயிற்சியாளர் கம்பீரின் பதவிக்கு ஆபத்து?
அணியில் மாற்றத்தை உறுதிசெய்யாவிடில், தலைக்கு கத்தி?

மும்பை, ஜன.28; இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றத்தை உறுதி செய்யவில்லை எனில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவிக்கு ஆபத்து வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
கம்பீர் பதவியேற்ற பின் தொடர் தோல்வி

இதனையடுத்து கௌதம் கம்பீர் அந்தப் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். அவர் பதவியேற்றதிலிருந்து இந்திய அணி மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.
கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கி ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அவரது செயல்பாடுகளை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மதிப்பாய்வு செய்து வருகிறது.
கம்பீருக்கு தற்போது நெருக்கடி இல்லை

ரோகித் ஷர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் போன்ற மூத்த வீரர்களின் சமீபத்திய மோசமான செயல்பாடுகளும் கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை ஈர்த்திருப்பது, கம்பீருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
ரோகித்தும், விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கௌதம் கம்பீருக்கு நெருக்கடி ஏற்படாது எனத் தெரிகிறது.
வரவிருக்கும் தொடர்கள் தீர்மானிக்கும்

ஆனால், அடுத்து வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகியவற்றில் இந்திய அணியின் செயல்பாடுகள் தான் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா என்பதை தீர்மானிக்கும் என்று பேசப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, கம்பீர் தலைமைப் பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தியாகிவிடும், அதற்குள் அணியில் மாற்றத்தை உறுதிசெய்ய வேண்டும், இல்லையெனில், கம்பீரின் தலைக்கு கத்திவரக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.







