தலைமை ஆசிரியர் மாற்றம்… தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்க வந்தவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், அதிரடி நடவடிக்கையாக, தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசு அனுமதி இல்லாமல், பள்ளிகளில் இனி எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சொற்பொழிவாளர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசுப்பள்ளியில் இதுபோன்று நடப்பது தவறு என்றும், முற்பிறவி பற்றி பள்ளி மாணவர்களிடையே அந்த பேச்சாளர் பேசியதால் எதிர்த்ததாகவும், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கர் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள அவர், முற்பிறவி பற்றி பேசக்கூடாது என்று நான் கூறியதை ஏற்காததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். அந்த பேச்சாளர் மகா விஷ்ணு பேசியது அறிவுக்கு ஒவ்வாத செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.







