ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி ஒப்புதல் வழங்கியது

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துவதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ அறிவித்தது. மேலும் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் துபாயில் நடத்துமாறும் வலியுறுத்தியது. இதனையடுத்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இணைந்து நடத்துவதற்கு ஐசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
முதலில் ஐசிசி எடுத்துரைத்த ஹைபிரிட் மாடலை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர் அழுத்தத்தால் ஐசிசியின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் இந்திய மண்ணில் பாகிஸ்தான் விளையாடாது என PCB அறிவுறுத்தியது. இதுதொடர்பாக BCCI மற்றும் PCB இடையே ICC நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அதன்படி 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் 2026-ல் இந்தியாவில் நடைபெறும் ஆடவர் டி-20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 2027-க்குப் பிறகு மகளிர் ஐசிசி உலகக் கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த பாகிஸ்தானுக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட மாட்டாது எனவும், பாகிஸ்தானில் உள்ள 3 மைதானங்களில் அனைத்துப் போட்டிகளும் நடக்கும் எனவும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தகுதிச் சுற்றுடன் இந்திய அணி வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினால், மற்ற ஆட்டங்கள் துபாயில் நடத்தப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.