NHRC-க்கு புதிய தலைவர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு
முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தலைவர்கள் கண்டனம்

டெல்லி, டிச.24 ; தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 9ஆவது தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ராமசுப்ரமணியத்தை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
NHRC-க்கு புதிய தலைவர் நியமனம்

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நிரஜ்குமார் பன்சோட் கையெழுத்திட்ட கடிதம் மூலம் நீதிபதி ராமசுப்ரமணியனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 2027 டிசம்பர் வரை மூன்று ஆண்டுகளுக்கு அவர், இந்தப் பதவியை வகிப்பார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூன்றாண்டுகள் பணியாற்றி, 2023 ஜூன் மாதம் ஓய்வுபெற்ற வி.ராமசுப்ரமணியன், பணமதிப்பு நீக்கத்தை உறுதி செய்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் பல அமர்வுகளில் ஒரு பகுதியாக இருந்தவர்.
பல வழக்குகளில் மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது.
மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

இதுபோன்ற சூழலில், ராமசுப்ரமணியத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமன செயல்முறை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அவர்களை தேர்வு செய்யும் செயல்முறைகளில் “குறைபாடுகள்” உள்ளதாக ராகுலும் கார்கேவும் விமர்சித்துள்ளனர். பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாமல் வி.சுப்ரமணியத்தின் நியமனம் முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவாக தெரிவதாக காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர்.
நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகிய இருவரில் ஒருவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கலாம் என்று, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் பரிந்துரை செய்துள்ளனர்.







