ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; திமுக அமோக வெற்றி
எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு

ஈரோடு, பிப்.08; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சுமார் 91,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை அடுத்து, அந்த தொகுதியில் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
திமுக வேட்பாளர் 91,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அதில் பதிவான வாக்குகள் இன்று (பிப்.08) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 23,927 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவில் 6,058 வாக்குகள் விழுந்தன.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் சுமார் 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
திமுகவை எதிர்த்து நின்ற அனைவரும் டெபாசிட் இழப்பு
திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திமுக, நாம் தமிழர் கட்சியைவிட வேறு பெரிய கட்சியினர் யாரும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுகவின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக அக்கட்சியின் வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு அவதூறு பரப்பியும் திமுகவே வெற்றி: சந்திரகுமார்
எவ்வளவு அவதூறு கருத்துகளைப் பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது எனவும் சந்திரகுமார் கூறியுள்ளார். திமுகவின் இந்த வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியின் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 134 ஆக அதிகரித்துள்ளது.