தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்
13 நகராட்சிகள் புதியதாக உருவாக்கம்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை, மாநகராட்சிகளுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

சென்னை, ஆவடி, திருவள்ளூர் உள்ளாட்சி விரிவாக்கம்
தற்போது உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன் திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. அதேபோன்று ஆவடி மாநகராட்சியுடன் பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகளும், கருணாகரச்சேரி, நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரவேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது.

13 நகராட்சிகள் புதிதாக உருவாக்கம்
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் உருவாக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல் கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாக ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.








