ராணுவ ஆட்சியை அமல்படுத்திய விவகாரம்
தென்கொரிய முன்னாள் அதிபர் அதிரடி கைது

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய விவகாரத்தில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சியோல்: கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், 2025-ம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட் மசோதா தொடர்பாக, ஆளும் மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல் (63) தென்கொரியாவில் அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.,க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சில மணி நேரத்தில் அவசரநிலை அறிவிப்பை திரும்பப் பெற்றார் யூன் சுக் இயோல். இந்நிலையில், ராணுவ சட்டத்தை திடீரென பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் கட்சி எம்பிக்களே ஆதரவு அளித்ததால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென் கொரிய நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி யூன் சுக் இயோலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

இதனையடுத்து தென் கொரியா புலனாய்வு அதிகாரிகள் யூன் சுக் இயோல் வீட்டிற்கு நேரில் சென்று, நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவை காட்டினர். மேலும் யூன் சுக் இயோலை கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி போராடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும் போலீசார் உதவியுடன் புலனாய்வு அதிகாரிகள், யூன் சுக் இயோலை கைது செய்து அழைத்து சென்றனர். இதனிடையே இந்த கைது உத்தரவு சட்ட விரோதமானது என எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியா முழுவதும், முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.








