சிட்னி பரிசளிப்பு விழாவில் கவாஸ்கர் புறக்கணிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு கடும் கண்டனம்

சிட்னி டெஸ்டின் பரிசளிப்பு விழாவில் வெற்றி கோப்பையை வழங்குவதற்கு, இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை அழைக்காமல் புறக்கணித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு, பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் இந்தியா பங்கேற்றது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில், அடிலெய்டு, மெல்போர்ன் மற்றும் சிட்னியில் அடுத்தடுத்த நடந்த 3 டெஸ்ட்டுகளிலும் ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பையை தன்வசப்படுத்தி இருக்கிறது ஆஸ்திரேலியா.

நேற்று சிட்னி மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில், டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பையை, முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் வழங்கினார். அப்போது மைதானத்தின் பவுண்டரிக்கு அருகே சுனில் கவாஸ்கர், சக வர்ணனையாளர் இர்பான் பதான் உடன் பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும் கவாஸ்கரை கோப்பையை வழங்க மேடைக்கு வருமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அழைக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த கவாஸ்கர், ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை வழங்குவதில் எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. மேலும் மைதானத்தில்தான் நின்றிருந்தேன். இந்த கோப்பையின் பெயர் ‘பார்டர்-கவாஸ்கர்’ என்பதால், நண்பர் ஆலன் பார்டர் உடன் இணைந்து கோப்பை வழங்கி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால், நான் ஒரு இந்தியர் என்பதால் அழைப்பு விடுக்கவில்லை என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் இந்த செயலை, இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் விமர்சகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர், “இந்த தொடரை இந்தியா வென்றால் கவாஸ்கரும், ஆஸி., வென்றால் ஆலன் பார்டரும் கோப்பையை வழங்குமாறு திட்டமிட்டிருந்தோம். இதன்படி ஆஸி., கேப்டன் கம்மின்சிடம் கோப்பையை வழங்கினார் பார்டர். இந்த விபரம் கவாஸ்கருக்கு தெரியாததால் கோபம் அடைந்திருக்கலாம் என சப்பைக்கட்டு கட்டினார்.

கடந்த 2023ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரை, இந்தியா வென்ற போது ஆமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் கவாஸ்கர் மட்டும் வெற்றி கோப்பையை ரோகித் சர்மாவிடம் வழங்கினார். அப்போது இந்தியாவில் ஆலன் பார்டர் இல்லாததால் அவர் அழைக்கப்படவில்லை. தற்போது சிட்னி மைதானத்தில் கவாஸ்கர் இருந்தும், அவரை பரிசளிப்பு மேடைக்கு அழைக்காதது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.







