டங்ஸ்டன் சுரங்கம்; மறு ஆய்வுக்கு பரிந்துரை
பல்லுயிர்ப் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் ஆய்வு

மதுரை, டிச.25; மதுரை மேலூர் அருகே, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவிருக்கும் இடம் குடைவரை கோயில்கள், சமண சிற்பங்கள், பஞ்சபாண்டவர் படுகைகள், தமிழ் பிராமி வட்டெழுத்துகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகும். மேலும் இப்பகுதி பல்லுயிர்ப் பெருக்க தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு

இதுபோன்ற காரணங்களால் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது. சுரங்கத்தால் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்டபோராட்டங்களை முன்னெடுத்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை

இதுபோன்ற சூழலில், டங்ஸ்டன் சுரங்கம் அமையவிருக்கும் இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த இந்திய புவியியல் ஆய்வு மையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பல்லுயிர்ப் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் ஆய்வு நடத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






