குழந்தைகளின் கல்விக்காக மாரத்தான்

சார்ஜ்பி என்கின்ற தனியார் நிறுவனம் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி மாரத்தான் நிகழ்ச்சி நடத்த உள்ளது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாரத்தான் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட்டை நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா வெளியிட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக்கொண்டார்.
சென்னை ரன்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி வசதிகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. மாரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் மாணவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி மாரத்தான் நிகழ்ச்சி பல்வேறு பிரிவுகளில் 11,000 பங்கேற்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ, மற்றும் 21.1 கிமீ அரை மாரத்தான் பிரிவுகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சி சென்றடையும். அரசுப் பள்ளியில் பல புதுப்புது திட்டங்கள் வருகின்றன. இதே போன்று பல திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும். அரசுப் பள்ளியின் தனித்துவத்தை மக்களுக்கு அரசு எடுத்து செல்ல வேண்டும்”.

“தமிழ்த் திரையுலகில் ஹேமா கமிட்டி சொல்வது போன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. நானும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளேன் எனக்கு அதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடந்ததில்லை. இது எதுவும் நடக்கக் கூடாது என்பது தான் நம் விருப்பம். தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி இதுவரை தேவைப்படவில்லை. தமிழ் சினிமா நன்றாகத்தான் உள்ளது. பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம். தமிழ்த் திரை உலகில் பாலியல் ரீதியான சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார். கட்சி ஆரம்பிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் தப்பே இல்லை. மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்றால், எல்லோரும் முன்வந்து பண்ணலாம். மக்களுக்கு நல்லது பண்ணால் சந்தோஷம் தான்” என்றார்.







