‘திமுக, விசிக இடையே விரிசல் இல்லை’ – திருமாவளவன்

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்றும், திமுக, விசிக இடையே எந்த விரிசலும் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக- விசிக இடையே விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது. அதனால் திமுக-விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது எழுவதற்கு வாய்ப்பு இல்லை” என கூறினார்.
மேலும் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு, உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசி தான் எந்த முடிவுகளையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களை பொருத்தவரை முன்னணிப் பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி, அது தொடர்பான முடிவுகளை எடுப்போம்” என தெரிவித்தார்.






