விரைவாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்க சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “செய்தியாளர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா” என்று கேட்டு தனது பேச்சைத் தொடங்கினார். “அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பியுள்ளேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாகவும் இந்த பயணம் அமைந்துள்ளது”.
“உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழிலைத் தொடங்குவதற்கு தொழில் முதலீடு செய்வதற்கான ஒரு பகுதியாக கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தேன். இந்த பயணம் மிகப்பெரிய பயணமாக அமைந்தது, உலகின் புகழ்பெற்ற, தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்களுடனான இந்த சந்திப்பின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்”.
“சான் பிரான்சிஸ்கோ-வில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் 11,516 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு ட்ரில்லியன் டாலர் பொருளாதார என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணிகளில், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன்”.
“இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு தவிர்க்க இயலாத காரணத்தினால் சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திவைத்த ஃபோர்டு நிறுவனம் எங்க வேண்டுகோளை ஏற்று சென்னை மறைமலைநகரில் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளனர். அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி போட்டு உறுப்பினர்களிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்று கூறினார்கள். அதற்குப் பிறகு விருப்பத்தை நாங்கள் அதிகமாக தெரிவித்த காரணத்தினால் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்க போங்க இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைக்கிறோம். அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று கூறினார்கள். நாங்கள் சிகாகோவில் ஏறி விமானத்தில் உட்கார்ந்த போது செய்தி கிடைத்தது. அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்று அந்த செய்தியை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்”.
“அதேபோல் என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின்படி, தமிழ்நாடு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்குகின்ற வகையில் செயற்கை நுண்ணறிவு குறித்தான பயிற்சி வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் google நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, ஆட்டோ டிஸ்க் நிறுவனத்துடனும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன், தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதன் மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், வணிகத்திற்கு உகந்த சூழல் நிலவுவது மட்டுமில்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்புகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது”.
“அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டின் இருப்பதைப் போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது, அமெரிக்க தமிழ் அமைப்புக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே உங்களை சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வந்த முதலீட்டுகளை பற்றி விளக்கமாக சொல்லியுள்ளேன். அது மட்டுமில்லாமல் தொழில்துறை அமைச்சரும் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருக்கிறார். சட்டமன்றத்தில் அது குறித்து தெளிவாக கூறியுள்ளார். அதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்”.
“எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதாக கூறினார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தங்கள் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் மிகப்பெரிய அவமானமாக அது அவருக்கு இருக்கும். ஜிஎஸ்டி குறித்து தொழில் முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை அவர் முன் வைத்தார் என்பதற்காக, மத்திய அமைச்சர் அதை கையாண்ட விதம் என்பது ரொம்ப வெட்கப்பட வேண்டிய ஒன்று. அதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து பிரதமரிடம் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன். ராமதாஸ் கூறுவது அரசியல் நோக்கத்துடன் சொல்லக்கூடிய விஷயங்கள், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான முதலீடுகள் வந்துள்ளது”.
அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், “திமுக என்பது சொன்னதைத்தான் செய்யும், சொல்வதைத் தான் செய்வோம், திமுக பவள விழாவை கொண்டாட உள்ளது. நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்” என்றார். “விசிக மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதனால், அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை” என்றும் முதலமைச்சர் கூறினார்.
வந்துள்ள முதலீடுகள் நூற்றுக்கு நூறு நிறைவேற்றக்கூடிய வகையில்தான் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், அதற்கான விரைவான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.






