“இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்” என்ற கருத்து
பதவி விலகியவரை மீண்டும் பணியில் அமர்த்த எகோபித்த ஆதரவு

வாஷிங்டன், பிப்.08; “இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்” என்ற இனவெறி கருத்து சர்ச்சையால் பதவி விலகிய மார்கோ எலெஸ் என்பவரை மீண்டும் பணியமர்த்த கோடீஸ்வரர் எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிதாக உருவாக்கப்பட்ட Department of Government Efficiency (DOGE ) அதாவது அரசு திறன் துறையில் முக்கிய ஊழியராகப் பணியாற்றியவர், மார்கோ எலெஸ்.
இனவெறி கருத்தால் சர்ச்சை; பதவி விலகிய மார்கோ எலெஸ்

25 வயதான மார்கோ எலெஸ், அமெரிக்க அரசின் செலவினங்களை ஆய்வு செய்ய D.O.G.E-ஆல் பணியமர்த்தப்பட்டார்.
இவர், தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்” என்றும், “எனது இனத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்ள நீங்கள் எனக்கு பணம் கொடுக்க முடியாது” என்றும் கருத்துப் பதிவிட்டிருந்தார்.
சிலிக்கான் வேலியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் பதிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
சர்ச்சையால் இனவெறி கருத்துகளை நீக்கினார், எலெஸ்

மார்கோ எலெஸின் இனவெறி பதிவுகள் கடும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் தனது பதவியிலிருந்து விலகினார். அத்துடன் எக்ஸ் தளத்திலிருந்து சர்ச்சைப் பதிவுகளையும் அவர் நீக்கினார்.
இதன் தொடர்ச்சியாக, எலெஸ் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டுமா? என உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக ஊடகங்களில் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
எலெஸை மீண்டும் பணியில் அமர்த்த 78% பேர் ஆதரவு

அதில், மார்கோ எலெஸை மீண்டும் பணியில் அமர்த்தலாம் என்று அவருக்கு ஆதரவாக 78 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்தனர். 22 விழுக்காடு பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் எலெஸ் மத்திய அரசுப் பதவிக்கு திரும்புவதை ஆதரித்தனர்.
எலெஸ் மீண்டும் பணிக்கு திரும்புவார்: எலான் மஸ்க்

இந்த கருத்துக் கணிப்பு மார்கோ எலெஸை மீண்டும் பணியிலமர்த்த வழிவகுத்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது புனிதமானது” என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவற்றில் மார்கோ எலெஸ் பணியாற்றினார். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தினார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கோள் காட்டியுள்ளது.







