கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
விக்கிரவாண்டி பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது

விக்கிவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அப்பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (34). இவரது மனைவி பெயர் சிவசங்கரி (32). இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி (4), விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். நேற்று பகல் 12.00 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வெளியே விளையாடிவிட்டு மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.

அப்போது ஆசிரியர் ஏஞ்சல், சிறுமி லியா லட்சுமி வகுப்பில் காணாமல் இருப்பதை பார்த்து பல்வேறு இடங்களில் தேடினார். மேலும் சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அங்கு கழிவுநீர் தொட்டி மேல் மூடி தகரம் உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் வழியே பார்த்தபோது கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவலறிந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பெற்றோர் உள்ளிட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மாலை 4.15 மணி அளவில் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி மற்றும் ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.






