திலக் வர்மா அதிரடி ஆட்டம்
2வது டி-20யில் இந்தியா த்ரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை, ஜன.25; இந்திய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்து விளையாடுகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 4, பென் டக்கெட் 3 ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 30 பந்தில் 45 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டானால் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் சர்மா 12 ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் சூர்யகுமார் 12, ஜூரேல் 4, பாண்ட்யா 7 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறியதால், 9.1 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா தடுமாறியது.

ஆனால் திலக் வர்மா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து களத்தில் நின்றதால் நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருந்தனர். அவருக்கு பக்க பலமாக வாஷிங்டன் சுந்தரும் அதிரடி காட்டினார். இருப்பினும் 13.4 ஒவரில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களில் அவுட்டானதால் ஆட்டத்தில் சுவாரசியம் கூடியது. பின்னர் வந்த அக்சர் பட்டேல் 2, அர்ஷ்தீப் 6 ரன்களில் வெளியேறியதால் போட்டியில் பரபரப்பு தொற்றியது.

இந்நிலையில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள திலக் வர்மா, 55 பந்துகளில், 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் 19.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை திலக் வர்மா தட்டிச் சென்றார்.








