“பாலியல் குற்றங்களின் பின்னணியில் திமுக”
வீடியோ வெளியிட்டு அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை, ஜன.2 ; தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு தி.மு.க.,வினரே காரணம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவர், அதே கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்பவர், திமுகவைச் சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
“பாலியல் குற்றங்களின் பின்னணியில் திமுக”

மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்செயல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு திமுகவினரே காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இதுபோன்ற சூழலில், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு திமுகவினரே காரணம் என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
“முதலமைச்சர் எச்சரிப்பதும் வீடியோவில் உள்ளது”

அந்த வீடியோவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று கூறுவதும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணியில் திமுகவினரே இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக அண்ணாமலை வசை பாடியுள்ளார்.
“கைப்பேசியில் பேசியவரை மறைக்க முயற்சி”

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலும், கைது செய்யப்பட்ட நபருடன் கைப்பேசியில் யார் என்ற உண்மையை மறைக்க திமுக அரசு முயல்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியில் அவமானப்படுத்தியும், அவரது தனிப்பட்ட விவரங்களை கசியவிட்டும், இனி யாரும் குற்றமிழைத்தவர்கள் மீது புகாரளிக்க அஞ்சும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருப்பதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.






