சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை கையிலெடுத்தது. அதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து அடையாள அட்டைகளை வழங்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உத்தரவை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை வேண்டாம். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை தான் வேண்டும். அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு மூன்று மாதங்கள்? என்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதி மக்களின் பிரச்னை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
கல்வராயன் மலைப் பகுதியில் மினி பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ நாளை பிற்பகல் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.






