அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
2019 தேர்தலில் பணம் கொடுத்த புகாரில் மீண்டும் ரெய்டு

வேலூர், ஜனவரி 3 ; வேலூர் மற்றும் காட்பாடியில், அமைச்சர் துரைமுருகனின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம் நிறுத்தப்பட்டார்.
2019 தேர்தலில் பணம் கொடுத்ததாகப் புகார்

அந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், 2019 மார்ச் 29ஆம் தேதி இரவு தொடங்கி மறுநாள் வரை (மார்ச் 30) துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது துரைமுருகனின் வீட்டில் ரூ.10.57 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 11 கோடி பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத்துறையும் வழக்குப் பதிந்து விசாரணை

இந்த பண விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுபோன்ற சூழலில், வேலூரில் உள்ள துரைமுருகனின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 3) காலை வந்தனர்.
துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை

அப்போது துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர். தகவலறிந்து அவர்கள் இருவரும் வந்ததும், அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வீடு மற்றும் கல்லூரியில் சோதனை

இதேபோல் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இதுதவிர, பூஞ்சோலை சீனிவாசன் ,அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறையினரின் சோதனை குறித்த தகவல் பரவியதை அடுத்து, துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்தின் வீடுகளின் முன் பு திமுகவினர் பெருமளவில் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.






