“பாக்ஸிங் டே” டெஸ்ட் நாளை மறுநாள் துவக்கம்
'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி,”பாக்ஸிங் டே” ஆட்டமாக, நாளை மறுநாள் மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் ஹாட்ரிக்’ வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 – 1 என சம நிலையில் உள்ளன. இந்நிலையில் டிசம்பர் 26 முதல் 30 தேதி வரை, 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது. பொதுவாக டிசம்பர் 26ல் தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் “பாக்ஸிங் டே” போட்டி என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில், இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்குகிறது. ஆட்டம் நடைபெற உள்ள 5 நாட்களிலும் அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்கும். சூழ்நிலையை பொறுத்து 3-வது பகுதி ஆட்டம் சிறிது நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

மெல்போர்னில் கடந்த 3 நாட்களாக இந்திய அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், கோஹ்லி, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் உள்பட பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரும் கடின பவுலிங் பயிற்சி செய்தனர். இந்நிலையில் இந்திய அணிக்கு பழைய ஆடுகளமும், ஆஸ்திரேலியாவுக்கு புதிய ஆடுகளமும் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு ரோகித் சர்மா விளையாட வேண்டும் என ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். ஏனெனில் 6-வது வரிசையிலும் அபாயகரமான பேட்ஸ்மேனாக அவரால் செயல்பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும். கடந்த முறை களம் இறங்கிய போது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருந்தார். இந்த மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அவர் பார்முக்கு திரும்பவும், இந்தியாவின் வெற்றிக்கும் வழிவகுக்கும் என ரவி சாஸ்திரி அறிவுறுத்தி இருக்கிறார்.

மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியுள்ள 14 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா இதுவரை 4ல் மட்டுமே வென்று இருக்கிறது. மேலும் 8ல் தோல்வி, 2ல் ‘டிரா’ செய்தது. ஆஸ்திரேலிய மண்ணில் (1977-78) மெல்போர்னில் தான் முதல் வெற்றியை பெற்றது இந்தியா. இங்கு கடந்த 2 டெஸ்டில் (2018, 2020) தொடர்ச்சியாக இந்தியா தான் வென்று இருக்கிறது. இம்முறை அசத்தினால் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.







