ODIயில் பாகிஸ்தான் “ஹாட்ரிக்” வெற்றி
தென் ஆப்ரிக்கா 'ஒயிட்வாஷ்' தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரையும் 3-0 எனக் கைப்பற்றி சாதித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்றது. முதல் 2 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. மழை காரணமாக ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதில்’டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

நடப்புத் தொடரில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான இளம் வீரர் சைம் அயூப் மீண்டும் சதம் அடித்து (101) நம்பிக்கை தந்தார். பாபர் ஆசம் (52), கேப்டன் முகமது ரிஸ்வான் (53) அரைசதம் விளாசினர். சல்மான் ஆகா (48) ரன்கள் அடிக்க 47 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் பாகிஸ்தான் குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு, கேப்டன் பவுமா (8) டோனி ஜோர்ஜி (26), வான் டெர் துசென் (35) ஏமாற்றினர். மார்க்ரம் (19), டேவிட் மில்லர் (3), மார்கோ யான்சென் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். மீண்டும் கிளாசன் மட்டுமே ஒற்றை ஆளாக வெற்றிக்கு போராடி 81 ரன்களில் வெளியேறினார். கார்பின் (40) அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில் 42 ஓவரில் 271 ரன்களுக்கு தென் ஆப்ரிக்கா’ஆல்-அவுட்டாகி’ தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் சுபியான் முகீம் 4, ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் அணியானது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பாகிஸ்தானின் இளம் வீரர் சைம் அயூப் அள்ளினார்.








