தடுப்பூசி போட்டவுடன் மோசமான பாதிப்பு.. தீவிர சிகிச்சையில் 23 வயது இளம்பெண்.. என்ன நடந்தது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் 23 வயது இளம்பெண் ஒருவருக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிக மோசமான பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. தற்காலிக குருட்டுத்தன்மை தொடங்கிப் பல பாதிப்புகள் அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், உயிருக்குப் போராடும் சூழலுக்கு அந்த பெண் தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசித்து வரும் 23 வயது பெண் அலெக்சிஸ் லோரன்ஸ்.. அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பல வகையான நோய்களுக்கு தனித்தனியாகத் தடுப்பூசிகள் போடுவார்கள்.
அதன்படி அவர் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான வேக்சின் போட்டுள்ளார். இருப்பினும் தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தற்காலிக கண் பார்வை இழப்பு, வாந்தி என உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறவும் அவரிடம் பணம் இல்லை. பின்னர் இதற்காக இணைய வழியில் உதவி கேட்டு, பணம் திரட்டி உதவியுள்ளனர். இப்போது அந்த பெண் உடல்நிலை ஓரளவுக்குச் சீராகியுள்ளது என்ற போதிலும் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை.
இதற்கிடையே தனக்கு என்ன நடந்தது என்பதை விளக்கி அந்த பெண் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண்ணின் உடல்நிலையைப் பார்க்கவே மிக மோசமாக இருக்கிறது. கண்கள் வீங்கி போய் இருக்கிறது. முகம் கருப்பு-ஊதா நிற சிராய்ப்புகளுடன் இருக்கிறது. தலை வீங்கி போய் இருக்கிறது. சாதாரண தடுப்பூசி அந்த பெண்ணுக்கு இந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பாதிப்புகள் இத்துடன் நிற்கவில்லை. வேக்சின் போட்ட சில நாட்களிலேயே ரத்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ரத்த மாற்றுச் சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பின்னரே அவரது உடல்நிலை கொஞ்சம் சீரானது. இருந்த போதிலும் அவரது உடல்நிலை இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை. தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.
மிக மிக அரிதாகச் சிலருக்கு இதுபோன்ற வைரஸ் பாதிப்புகள் ஏற்படும்.. அதேநேரம் இதனால் அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும், இந்த நிலைக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று சொல்லியுள்ள லெக்சிஸ் லோரென்ஸுக்கு குடும்பத்தினர் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறார்கள்.







