நாடு கடத்தல் என்றால் என்ன?
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தல் நடைபெறுவது ஏன்?

வாஷிங்டன், பிப்.06; Deportation. அதாவது, நாடு கடத்தல். தற்போது உலகம் முழுவதும் ஒலிக்கும் சொல். அதற்கு காரணம், அமெரிக்கா.
நாடு கடத்தல் என்பது குடியேற்றச் சட்டத்தை மீறியதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து குடிமகன் அல்லாத ஒருவரை வெளியேற்றும் செயல்முறையைக் குறிக்கிறது.
பல்வேறு பிரச்னைகளுக்காக நாடு கடத்தப்படுகின்றனர்

விசா முடிந்த பின்னரும் தங்கியிருப்பது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது அல்லது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது போன்ற பிரச்னைகளில் சிக்குவோர் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர்.
நாடு கடத்தப்படுபவர்களை நீதிமன்றம் தீர்மானிக்கிறது

மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஈடுபடுபவர்கள் முதலில் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார். .நீதிமன்றத்தில் அவர்களின் வழக்கு மறுஆய்வு செய்யப்படும் வரை அவர்கள் தடுப்பு மையத்தில் வைக்கப்படலாம். அவர்கள் அமெரிக்காவில் இருக்க தகுதியுடையவர்களா அல்லது நாடு கடத்தப்பட வேண்டியவர்களா என்பதை நீதிபதி தீர்மானிக்கிறார்.
சில சந்தர்ப்பங்களில் குடிமக்கள் அல்லாதோர் தாமாகவே முன்வந்து தங்களது நாட்டிற்கு திரும்புவதை தேர்வு செய்யலாம்.
இந்தியர்கள் 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. ராணுவ விமானத்தில் அழைத்துவரப்பட்ட அவர்கள், நேற்று (பிப்.05) அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் கீழ், இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நாடு கடத்தல்

கடந்த மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ள சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நாடு கடத்தப்படுவது நடந்துள்ளது.
இதற்கு முன்னர் அமெரிக்கா இந்திய பிரஜைகளை முந்தைய நிர்வாகத்தின் கீழ் நாடு கடத்தியிருந்தாலும், அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவ விமானம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். நாடு கடத்தப்படுவதற்கான செலவை அமெரிக்க அரசு ஏற்கிறது.
மோடி அமெரிக்கா செல்லும்போது பேச்சுவார்த்தை

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக அமெரிக்கா இருப்பதால், இரு நாடுகளும் தங்கள் உறவை மேம்படுத்த ஆர்வமாக உள்ளன.
குறிப்பாக ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, திறமையான தொழிலாளர்களுக்கு அமெரிக்க விசாக்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய இந்தியா ஆர்வமாக உள்ளது.
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்பை நேரில் சந்திக்கும்போது, குடியேற்றம் தொடர்பாக சிக்கல்களை பேசித் தீர்ப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







