WPL கிரிக்கெட்; மும்பை அணி 2-ஆவது முறையாக சாம்பியன்
3ஆவது முறையாக பட்டத்தை கோட்டைவிட்ட டெல்லி அணி

மும்பை, மார்ச்.16; மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
ஹர்மன்ப்ரீத் கௌர் அசத்தல் ஆட்டம்
முதலில் பேட் செய்த மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 44 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரியளவில் ஜொலிக்கவில்லை.
கட்டுக்கோப்பாக பந்துவீசிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணியை 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
தொடக்கம் முதலே தள்ளாடிய டெல்லி
150 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும், மரிசான் கேப் 40 ரன்களும் எடுத்து அணிக்கு ஓரளவு கைகொடுத்தனர்.
மற்றபடி யாரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தாததால் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் தோல்வியைத் தழுவியது.
3ஆவது முறையாக டெல்லியை துரத்திய துரதிர்ஷ்டம்
மும்பை இந்தியன்ஸ் அணி WPL தொடரை இரண்டாவது முறையாக வென்றுள்ள அதேவேளையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளது.