செய்தியாளர்களிடம் கோலி வாக்குவாதம்
மெல்போர்ன் விமான நிலையத்தில் பரபரப்பு

மெல்போர்ன் விமான நிலையத்தில் அனுமதி இல்லாமல் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்ததாக கோபம் கொண்டு, விராத் கோலி செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் நடப்புத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 4 டெஸ்ட் போட்டி”பாக்சிங் டே” ஆட்டமாக வரும் டிச. 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணியினரும் நேற்று மெல்போர்ன் வந்தனர்.

அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது கோலி குடும்பத்தினரை, ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த கோலி அவர்களிடம் திடீர் வாக்குவாதம் செய்தார். ”எனது குழந்தைகளுடன் செல்கிறேன். எங்களுக்கு ‘பிரைவசி’ தேவை. என்னிடம் கேட்காமல் குடும்பத்தினரை புகைப்படம் எடுக்க வேண்டாம்” என்றார். இதுதொடர்பாக பெண் செய்தியாளர் ஒருவரிடம் கோலி சண்டைப் போடும் வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் மெல்போர்ன் விமான நிலையத்தில் நடந்தது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மெல்போர்ன் விமான நிலையத்தில் நடந்து வந்த விராட் கோலி, தமது குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், குழந்தைகளை புகைப்படம் எடுத்ததாக நினைத்து வாக்குவாதம் செய்தார். “எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதன்பின்னர் உங்கள் குடும்பத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவில்லை என கோலியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அங்கிருந்த பத்திரிகையாளர் மற்றும் கேமராமேன் இணைந்து, ஆஸ்திரேலிய வீரர் போலந்தை தான் புகைப்படம் எடுத்தோம். உங்கள் குடும்பத்தினரை எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தனர். பின்பு கோலி சமாதானம் அடைந்து புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.








