கனடா கோயில் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது

கனடாவில் உள்ள இந்து கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகாசபை கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிகழ்வு உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயிலில் இருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் கொடியுடன் வந்த குண்டர்கள், குச்சிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கனடாவில் இந்து கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இந்திய தூதர்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வன்முறைச் செயல்கள், இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது எனவும், கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், ஒவ்வொரு கனடியருக்கும் தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.







