சிட்னி டெஸ்டில் பங்கேற்பாரா கோலி?
20% அபராதம், 1 தகுதி இழப்பு புள்ளி தண்டனை விதிப்பு

ஆஸ்திரேலிய இளம் வீரர் கான்ஸ்டாஸ் மீது இடித்த சம்பவத்தில், கோலியின் ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் மற்றும் 1 தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாக ஐசிசி வழங்கி இருக்கிறது. இதனால் சிட்னி டெஸ்டில் விளையாட கோலிக்கு தடை விதிக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று, மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியின் 10வது ஒவரின் முடிவில் தான் அந்த அசம்பாவித நிகழ்வு நடந்தேறியது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 19 வயது இளம் வீரர் கான்ஸ்டாஸ் அதிரடி துவக்கம் தந்தார். பும்ராவிற்கு எதிராக 4483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் விளாசி கான்ஸ்டாஸ் சாதனை புரிந்தார். தொடர்ந்து பும்ராவின் பந்தில் 2 சிக்சர்கள் அவர் விளாசியதால், இந்திய ரசிகர்கள் சற்று கடுப்பில்தான் இருந்தனர்.

அப்போது 10வது ஓவர் முடிந்தவுடன் கோலி பந்தை எடுத்துக் கொண்டு பவுலிங் மாற்றத்திற்காக எதிர் பக்கமாக வேகமாக வந்தார். எதிரில் கையில் கிளவுசை கழற்றிய படியே வந்தார் கான்ஸ்டாஸ். அப்போது இருவரும் தோளில் நேரடியாக இடித்துக் கொண்டனர். இதனால் இருவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால், சக வீரர் கவாஜா மற்றும் அருகில் இருந்த அம்பயர் வந்து சமாதானம் செய்தனர்.

கோலியின் இந்த செயல் விதிகளை மீறியது என்று விமர்சிக்கப்பட்டதால் ‘மேட்ச் ரெப்ரி’யிடம் அதிரடி புகார் தரப்பட்டது. இதனால் சிட்னி டெஸ்டில் பங்கேற்க கோலிக்கு தடை விதிக்கப்படலாம் என பரபரப்பு செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,” கோலி தனது தவறை ஒப்புக் கொண்டதால் விசாரணை நடத்தப்படவில்லை. கோலிக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. தவிர ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் பாயிண்ட் அதாவது தகுதி இழப்பு புள்ளி வழங்கப்படுவது வழக்கம். 2 ஆண்டுகளில் தொடர்ந்து 4 தகுதி இழப்பு புள்ளி பெற்றால்தான், 1 டெஸ்டில் பங்கேற்க வீரருக்கு தடை விதிக்கப்படும். ஆனால் 2019-ம் ஆண்டுக்குப் பின்பு இப்போது தான் கோலி 1 தகுதி இழப்பு புள்ளி பெற்றுள்ளார். எனவே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் இல்லை என அறிவிக்கப்பட்டது.

மெல்போர்ன் டெஸ்டில் கோலிக்கு சம்பளம் ரூ. 15 லட்சம் ஆகும். 20 சதவீதம் அபராதம் என்பதால் ரூ. 3 லட்சம் பிடிப்பு போக ரூ. 12 லட்சம் கிடைக்கும் என தெரிகிறது. இதனிடையே போட்டி மைதானங்களில் இதுபோன்று கோலி தொடர்ந்து ஆவேசமாக நடந்து கொள்வதும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அவரது திறமைக்கும், அனுபவத்துக்கும் உகந்ததாக இல்லை என முன்னாள் வீரர்கள் பலரும், கிரிக்கெட் ரசிகர்களும் அறிவுரை வழங்கி உள்ளனர்.








