Capital Punishment: மாணவி சத்யா கொலை வழக்கு.. சதீஷுக்கு மரண தண்டனை.!

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார்.
தூக்கு தண்டனை
சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி கடந்த 27ஆம் தேதி சதீஷ் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும் 30ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் 30ஆம் தேதியான இன்று, சதீஷுக்கு தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.






