வடபழனி முருகன் கோவில்; நள்ளிரவு 12 மணி வரை தரிசனம்
புத்தாண்டையொட்டி பக்தர்கள் திரண்டு வருவதன் எதிரொலி

சென்னை, ஜன.1 ; புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் பெருமளவில் வருவதை கருத்தில் கொண்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணி வரை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

பெரும்பாலான கோவில்களில் அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் மக்கள் பெருந்திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணி வரை தரிசிக்கலாம்

வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்படுவதுண்டு. ஆனால், இன்று (ஜன.1) கூட்டம் அதிகமாக உள்ளதால் கோவில் நடை அடைக்கப்படவில்லை. மேலும், கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வடபழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.







