நாடு கடத்தப்பட்டவர்களை திருப்பி அனுப்பிய கொலம்பியா
குற்றவாளிகள் போல் நடத்தாதீர் என அமெரிக்காவுக்கு கண்டனம்

பொகோடா, ஜன.27; அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த கொலம்பியா நாட்டவர் நாடு கடத்தப்பட்ட ராணுவ விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் ட்ரம்ப்

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவோம்” என்ற வாக்குறுதியின் பேரில் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்துள்ளார். அதனை நிறைவேற்றும் வகையில், பல்வேறு நாட்டவர் அமெரிக்க ராணுவ விமானங்களில் அவரவரது நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர்.
இதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடும் எதிர்ப்புக் கிளம்யிபுள்ளது. புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
2 ராணுவ விமானங்களை திருப்பி அனுப்பிய கொலம்பியா

அந்த வகையில், அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடன் கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ராணுவ விமானங்களை அந்நாடு தடுத்துவிட்டது.
இதுதொடர்பாக டொனால்டு ட்ரம்ப் மற்றும் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா

அதன் எதிரொலியாக, கொலம்பியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததை குஸ்டாவோ பெட்ரோ வன்மையாகக் கண்டித்துள்ளார். “அமெரிக்கா ஒருபோதும் எங்களை ஆள முடியாது” என்று பெட்ரோ விமர்சித்துள்ளார்.
பின்னர் அமெரிக்காவின் நிபந்தனைகளை கொலம்பியா ஏற்றுக் கொண்டதை அடுத்து, ட்ரம்ப் நிர்வாகம் தடைகளைத் திரும்பப் பெற்றது.
இதனையடுத்து, நாடு கடத்தப்பட்டவர்களாகத் திரும்பும் கொலம்பியர்களை அரசு திரும்பப் பெறும் என்று, கொலம்பிய வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-கொலம்பியா இடையே மோதல்

புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தும் விவகாரத்தில் அமெரிக்கா-கொலம்பியா இடையே ஏற்பட்டுள்ள மோதல் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொலம்பியா அதிபர் பெட்ரோ, “புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா குற்றவாளிகளாகக் கருத முடியாது” என்று கூறியுள்ளார்.
“புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளாக கருதக்கூடாது”

புலம்பெயர்ந்தோரை கண்ணியத்துடன் ஏற்றிச்செல்ல தனது விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பத் தயாராக உள்ளதாகவும் பெட்ரோ தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படும் கொலம்பியா நாட்டவரை குற்றவாளிகள் போல் நடத்தாமல் பயணிகள் விமானங்களில் அனுப்பி வைத்தால், தரையிறங்க அனுமதி தயாராக இருப்பதாகவும் பெட்ரோ கூறியிருக்கிறார்.
“கொலம்பியாவில் கூட அமெரிக்கர்கள் உள்ளனர்”

கொலம்பியாவில் கூட உரிய ஆவணங்களின்றி 15,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இருப்பதாகவும், ஆனால் அவர்களை கைது செய்து நாடு கடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.
கொலம்பியா அதிபருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு

கொலம்பியா நாட்டவர் வந்த அமெரிக்க ராணுவ விமானங்களை திருப்பி அனுப்பியது “மிகவும் பொறுப்பற்ற செயல்” என்று முன்னாள் கொலம்பிய அதிபர் இவான் டியூக் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களைத் திரும்பப் பெறுவது கொலம்பியாவின் “தார்மீகக் கடமை” என்று கூறியுள்ள டியூக், அமெரிக்கத் தடைகள் கொலம்பியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.







