குரானை தீயிட்டு எரித்தவர் ஸ்வீடனில் சுட்டுக்கொலை
வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பா என போலீஸ் சந்தேகம்

ஸ்டாக்ஹோம், ஜன.31; இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பலமுறை தீயிட்டு எரித்த நபர் ஸ்வீடனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈராக்கை பிறப்பிடமாகக் கொண்ட சல்வான் மோமிகா என்பவர், 2023ஆம் ஆண்டு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், மசூதிக்கு வெளியே குரானின் நகலை தீ வைத்து எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இஸ்லாத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்

மோமிகா, இஸ்லாத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததால், இஸ்லாமிய நாடுகளில் அவருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
மேலும் ஈராக்கில் உள்ள ஒரு இனக்குழுவிற்கு எதிராக நான்கு முறை கிளர்ச்சி செய்ததாகவும் மோமிகா மீது குற்றச்சாட்டப்பட்டது.
ஸ்வீடனில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை

இதுபோன்ற சூழலில், ஸ்டாக்ஹோமில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மோமிகா, நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை தொடர்பாக 5 பேர் கைது

மோமிகா படுகொலை தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஸ்டாக்ஹோம் போலீசார் கூறியுள்ளனர்.
சுடப்பட்ட நேரத்தில் மோமிகா சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மோமிகா படுகொலையில் வெளிநாட்டு சக்திகளின் கை இருக்கலாம் என்று ஸ்வீடன் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது.







