சென்னையில் மீண்டும் ‘டபுள் டெக்கர்’ பேருந்துகள்..!
எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என அதிகாரிகள் ஆய்வு

சென்னை, பிப்.07; சென்னையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, பாரிமுனை – தாம்பரம் உள்ளிட்ட சில வழித்தடங்களில் ‘டபுள் டெக்கர்’ எனப்படும் ஈரடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இரண்டடுக்கு பேருந்துகளில் விரும்பி பயணித்த பயணிகள்
இதில் மேலடுக்கில் அமர்ந்தபடி செல்வதை பயணிகள் அதிகம் விரும்பியதுண்டு. நீண்டதூரம் பயணிப்போர், பேருந்தில் சற்று உயரத்தில் அமர்ந்த வண்ணம், சென்னை மாநகரின் வானுயர்ந்த கட்டடங்கள் மற்றும் அழகை ரசித்தபடி செல்வார்கள்.
இருப்பினும், காலப் போக்கில் அந்த வகைப் பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
சென்னையில் விரைவில் 625 புதிய பேருந்துகள்
இதுபோன்ற சூழலில், சென்னையில் இயக்குவதற்காக வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதற்கடுத்து இரண்டாவது கட்டமாக 600 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ள மாநகரப் போக்குவரத்து துறை, அதில் 20 டபுள் டக்கர் பேருந்துகளையும் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டடுக்கு பேருந்துகளுக்கான வழித்தடங்கள் ஆராயப்படுகின்றன
பல இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதாலும், இரண்டடுக்கு பேருந்துகளை எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், சென்னையில் ஒளி மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தலாம் என்று மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.