மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விளையாடியதால் சர்ச்சை
ஐசிசியின் விதிகளுக்குப் புறம்பானது என இங்கிலாந்து அதிருப்தி

புனே, பிப்.1; புனேவில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், ஷிவம் துபேக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியின் கடைசி ஓவரில், (Jamie Overton) ஜேமி ஓவர்டன் வீசிய ஐந்தாவது பந்து ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் தலைக்கவசத்தை தாக்கியது.
ஷிவம் துபேவுக்குப் பதில் ஹர்ஷித் ராணா; வெடித்தது சர்ச்சை

இதனையடுத்து ஷிவம் துபே மூளையதிர்ச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர், தொடர்ந்து விளையாடலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் களமிறங்கி, கடைசிப் பந்தில் ரன் அவுட்டானார்.
பின்னர் இங்கிலாந்து அணி சேஸிங் செய்தபோது, இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி தோல்வியடைந்த இப்போட்டியில், ஹர்ஷித் ராணா 4 ஓவர்கள் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை; ஜோஸ் பட்லர்

இதுபோன்ற சூழலில், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை மாற்றுவீரராக களமிறக்கியது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், இது தொடர்பாக தங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறாததற்கு இது முழுக்காரணம் அல்ல, இதில் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன, ஆல் ரவுண்டருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்ததை நாங்கள் ஏற்கவில்லை” என்று பட்லர் தெரிவித்துள்ளார்.
துபே ஆல்-ரவுண்டர், ராணா வேகப்பந்துவீச்சாளர்: மைக்கேல் வாகன்

ஹர்ஷித் ராணா விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், “பகுதி நேரமாக பந்துவீசக்கூடிய ஒரு ஆல்-ரவுண்டருக்கு மாற்றாக முழுநேர பந்துவீச்சாளர் ஒருவரை எப்படி அணியில் சேர்க்கலாம்” என்று வினவியுள்ளார்.







