ஏழுமலையான் கோவிலில் மகாசாந்தி யாகம்

பிரசாதம் தயாரிக்க ஏழுமலையான் கோவிலுக்கு திண்டுக்கல்லில் இருந்து சப்ளை செய்யப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது என்ற நேஷனல் டைரி டெவலப்மென்ட் போர்டு ஆய்வகத்தின் ஆய்வு அறிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. பக்தர்களிடையே பெரும் கவலை ஏற்பட்டது. ஏழுமலையான் கோவிலுக்குள் விலங்குகளின் கொழுப்புகளை அறியாமல் கொண்டு சென்ற செயலால் ஏற்பட்ட அபச்சாரத்திற்கு பரிகாரம் காண தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தியது.
அப்போது கோவிலுக்குள் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய நெய் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு மாதம் ஆகிறது. அதன் பின் இது போன்ற தவறுகளுக்கு பரிகாரம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பரிகார பூஜையான பவித்ரோற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடத்தப்பட்டது. எனவே புதிதாக பரிகார பூஜை நடத்த தேவையில்லை என்று ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் எடுத்து கூறினர். ஆனாலும் பக்தர்களின் மனநிலை, நம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் தேவஸ்தானத்திற்கு தொடர்ந்து இருந்து வந்தது. எனவே பக்தர்களின் நம்பிக்கை, மனநிலை ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் இன்று காலை 6:00 மணிக்கு துவங்கி 10 மணி வரை ஏழுமலையான் கோவிலுக்குள் சாந்தி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை கோவில் ஜீயர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் உள்ள யாகசாலையில் ஜீயர்கள், ஆகம சாஸ்திர நிபுணர்கள் ஆகியோரின் மேற்பார்வையில்வேத பண்டிதர்கள் சாந்தி யாகம் நடத்தினர்.







