“சென்னைக்கு வாங்க சைக்கிள் ஓட்டலாம்” -ராகுலுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் எப்போது சைக்கிள் ஓட்டலாம் என அழைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வரலாம், ஒன்றாக சென்னையை சுற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்,

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2030-குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்’றுள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட அவர், 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றடைந்தார்.
இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த வகையில், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், நோக்கியா, மைக்ரோசிப் டெக்னாலஜி, பேபால், அப்ளைடு மெட்டீரியல்ஸ், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். மேலும், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. அதன் பின்னர் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கடற்கரையில் மாலை நேர உலாவாக சைக்கிளில் சென்றார்.

அந்த வீடியோவை “மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வழிவகுக்கும்” என்ற வாசகத்துடன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை ரீ ட்வீட் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி, “சகோதரரே.. சென்னையில் எப்போது நாம் இருவரும் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம்?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் “அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி! உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வாருங்கள், நம் இருவரும் ஒன்றாக சென்னையின் மையப் பகுதிகளில் சவாரி செய்வோம். மேலும் நான் உங்களுக்குத் ஸ்வீட் பாக்ஸ் தர வேண்டியது பாக்கி உள்ளது. நாம் சைக்கிள் சவாரி செய்த பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சுவைக்கலாம்” என்று கூறியுள்ளார்







