சென்னையில் பைக் ரேஸ், வீலிங்; 250 வாகனங்கள் பறிமுதல்
குடிபோதையில் சென்றவர்களை மடக்கிப்பிடித்த போலீஸ்

சென்னை, ஜன.01; தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்தது, அதிவேகமாக பைக் ஓட்டியது போன்ற காரணங்களுக்காக 242 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட அகன்ற, மீக நீளமான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்வது, சாகசம் என்ற பெயரில் வீலிங் செய்வது, குடிபோதையில் பைக் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவர்களை, காவல்துறையினர் எவ்வளவு எச்சரித்தாலும் மீண்டும் மீண்டும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தாலும், தண்டம் விதித்தாலும் அதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை.
புத்தாண்டு; போலீஸ் எச்சரிக்கை

இத்தகைய சூழலில், புத்தாண்டை ஒட்டி இதுமாதிரியான செயல்களில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவார்கள் என்பதால், போலீசார் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.
பைக் வீலிங் செய்வது, பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர்.
வீலிங்,ரேஸ்; சுமார் 250 வாகனங்கள் பறிமுதல்

இதனையடுத்து நேற்றிரவு சென்னையில் 400-க்கும் அதிகமான இடங்களில் போலீசார்வாகனத் தணிக்கை மேற்கொண்டார்கள்.
அப்போது பைக் ரேஸில் ஈடுபட்டது, வீலிங் செய்தது, குடிபோதையில் வாகனங்களை இயக்கியது போன்ற காரணங்களுக்காக 242 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சில இடங்களில் மது அருந்தாமல் வழக்கத்தைவிட சற்று அதிகமான வேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மற்றபடி, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீசார் கூறியுள்ளனர்.






