ரஞ்சி கோப்பையில் ‘பிட்ச் பிக்சிங்’ ..!!
பரோடா அணி மீது ஜம்மு காஷ்மீர் அணி குற்றச்சாட்டு

வதோதரா, பிப்.02; ரஞ்சி கோப்பை தொடரில், பரோடா அணி ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக ஜம்மு காஷ்மீர் அணி குற்றஞ்சாட்டியிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஞ்சி கோப்பை எலைட் குரூப் A-வில் உள்ள க்ருனால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான போட்டி, குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆடுகளம் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

அந்த மைதானத்தின் ஆடுகளத்தை பரோடா அணியினர் சேதப்படுத்தியதாக ஜம்மு காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் அஜய் ஷர்மா குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவரது எதிர்ப்பு காரணமாக மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
முதல் இரண்டு நாட்களுக்கு விளையாடிய ஆடுகளத்தின் நிறத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்ததாக அஜய் ஷர்மா குறை கூறியுள்ளார். இது தொடர்பாக தங்கள் அணி தரப்பில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டை மறுக்கும் பரோடா அணி நிர்வாகம்

ஜம்மு காஷ்மீர் அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பரோடா அணி நிர்வாகிகள், இது ஆதாரமற்றது என்று கூறியுள்ளனர்.
குளிர்காலம் காரணமாக ஆடுகளம் மட்டுமல்ல, அவுட்ஃபீல்டு கூட ஈரமாக இருந்ததாகவும், போட்டி நடுவரும் இதனை உணர்ந்ததாகவும் பரோடா கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
அவுட் ஃபீல்ட் உலர நேரம் எடுக்கும்: பரோடா நிர்வாகம்

சில நேரங்களில் அவுட்ஃபீல்ட் உலர நேரம் எடுக்கும் என்பதை கிரிக்கெட் விளையாடிய எவரும் புரிந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தாங்கள் ஏற்கப்போவதில்லை என்று பரோடா அணி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இப்போட்டியில், ஜம்மு காஷ்மீர் அணி பரோடா அணிக்கு 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.







