சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சி
ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, ஜன.2 ; சென்னை செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 4ஆவது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி, 2) தொடங்கி வைத்தார்.
செம்மொழிப் பூங்கா சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவாகும். தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான அந்த இடத்தில், கண்கவரும் வகையில் மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
பரபரப்பான பகுதிக்கு மத்தியில் கண்காட்சி

வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பகுதியில், மாநில அரசு இந்தப் பூங்காவை அமைத்துள்ளது.
உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ப்பிரதேசங்களில் நடத்தப்பட்டு வந்தது போன்ற மலர்க்கண்காட்சி முதன் முறையாக, 2022ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக செம்மொழிப் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
மலர்க்கண்காட்சியை பார்த்து ரசித்த ஸ்டாலின்

பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள மலர்களை முதலமைச்சர் பார்த்து ரசித்தார்.இதனைத் தொடர்ந்து பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியையும் சிறிது நேரம் கேட்டு மகிழ்ந்தார்.
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில், நீலகிரி, கொடைக்கானல் போன்ற இடங்களிலிருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு, இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் 18ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மலர்க் கண்காட்சிக்கு, செம்மொழிப் பூங்காவில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை நுழைவுச்சீட்டு வழங்கப்படும். மேலும் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச் சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.






