கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் விருத்திமான் சகா
28 ஆண்டு கிரிக்கெட் பயணம் மறக்க முடியாதது என கருத்து

கொல்கத்தா, பிப்.02; இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சகா, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக மேற்குவங்க அணிக்காக தனது கடைசி ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடிய பின்னர், கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
ரஞ்சி கோப்பை போட்டியுடன் விடை பெற்றார்

பிப்ரவரி 2010 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான 40 வயதான சகா, இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் 142 முதல்தர மற்றும் 116 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்று உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் மற்றும் திரிபுரா அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம் கிரிக்கெட்”

விருத்திமான் சகா தனது கிரிக்கெட் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “1997-ல் கிரிக்கெட் மைதானத்தில் நான் முதன்முதலாக அடியெடுத்து வைத்து 28 வருடங்கள் ஆகிறது, அது என்ன ஒரு பயணம்! எனது நாடு, மாநிலம், மாவட்டம், கிளப்புகள், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம்’ என விருத்திமான் சகா தெரிவித்துள்ளார்.







