வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த நிகழ்வு
மன்னிப்பு கோரினார் உஸ்பெகிஸ்தான் வீரர் யாகுபோவ்

டெல்லி, ஜன.28; சதுரங்க போட்டியில், இந்திய வீராங்கனை வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்ததற்காக உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
டெல்லியில் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியில், நோடிர்பெக் யாகுபோவ், இந்திய வீராங்கனையும் ஆர். பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலியை எதிர்கொண்டார்.
வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெக் வீரர்

இதில் போட்டி தொடங்குவதற்கு முன்னர், வைஷாலி கைகுலுக்க முற்பட்டபோது, அதனை யாகுபோவ் நிராகரித்தார். இதனை வைஷாலி அசௌகரியாக உணர்ந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. யாகுபோவை கடுமையாக விமர்சித்த இணையதளவாசிகள், 2023இல் மற்றொரு இந்திய நட்சத்திரமான திவ்யா தேஷ்முக் உடன் அவர் கைகுலுக்கியதை நினைவூட்டி, வசைபாடினர்.
மன்னிப்பு கோரினார் உஸ்பெகிஸ்தான் வீரர்

சர்ச்சை அதிகரித்ததால், இதுகுறித்து யாகுபோவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “இந்தியாவின் வலிமையான சதுரங்க நட்சத்திரங்கள் என்ற அடிப்படையில் வைஷாலி மற்றும் அவரது சகோதரரை நான் மதிக்கிறேன்; எனது நடத்தையால் வைஷாலியின் மனது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“2023இல் திவ்யாவுடன் கைகுலுக்கியது தவறு”

மேலும், சதுரங்கம் இஸ்லாம் மதத்திற்கு புறம்பானது அல்ல, 2023இல் நான் செய்ததை (திவ்யாவுடன் கைகுலுக்கிய நிகழ்வு) தவறாகக் கருதுகிறேன், எதிர் பாலினத்தவர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்றோ அல்லது பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ நான் யாரையும் வலியுறுத்தவில்லை என்று, யாகுபோவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







