விராட் கோலி “out of form” அல்ல: ரவி சாஸ்திரி
கோலியின் ரன் 'பசி' குறையவில்லை என நம்பிக்கை

மெல்போர்ன், டிச.25 : நட்சத்திர வீரர் விராட் கோலி “அவுட் ஆஃப் ஃபார்மில் இல்லை” என்றும், அவரது ரன் “பசி” தீரவில்லை எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ என்றழைக்கப்படும் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவலை தரும் சில வீரர்களின் ஆட்டத்திறன்

ஆனாலும், ஒரு சில வீரர்களின் ஆட்டத்திறன் வளமையாக இல்லாததால், இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிய விராட் கோலி, பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் சதமடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுதவிர்த்து விளையாடிய மூன்று இன்னிங்ஸ்-களில் அவர் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
“கோலி சிறந்தநிலைக்கு திரும்புவார்”

இதனை வைத்து விராட் கோலி “அவுட் ஆப் ஃபார்ம்” எனக் கருதிவிடக்கூடாது என்று, இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஒரு சதம் தவிர்த்து கோலியின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததற்கு, அவர் அசௌகரியாகவும், மிடில் ஆர்டரில் தன்னைப் பற்றி உறுதியாக தெரியாதவராகவும் இருக்கிறார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தனது சமகால வீரர்களான ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தன்னை விஞ்சுவதைப் பார்த்த பிறகு கோலியும் ரன் பசியுடன் தான் இருப்பார் என்றும், ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் தனது சிறந்த நிலைக்குத் திரும்புவார் என்றும், ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்தார்.







