‘புஷ்பா 2’ பட விவகாரம்; நடிகர் அல்லு அர்ஜூன் கைது
14 நாள் நீதிமன்றக் காவல்; உடனே இடைக்கால பிணை

‘புஷ்பா 2’ திரைப்படத்தை அல்லு அர்ஜூன் காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இடைக்கால பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா 2’ . இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பிரீமியர் காட்சியாக வெளியிடப்பட்டது. அந்தக் காட்சியைக் காண நடிகர் அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது அவரைப் பார்க்க ஏராளமானோர் திரண்டதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் உள்ளிட்ட மேலும் சிலர் காயமடைந்தனர்.
அல்லு அர்ஜூன் கைது
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் இழப்பீடாக அறிவித்தார்.
இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் வைத்து அவரை போலீசார் இன்று (டிச.13) கைது செய்தனர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும், அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உடனே இடைக்கால பிணை
இதன் தொடர்ச்சியாக நாம்பள்ளியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அல்லு அர்ஜூனை, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் கோரி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.







