“இதுபோன்ற கதையைத் தயாரிக்க தைரியம் தேவை”
'ஜாலியோ ஜிம்கானா' பட நிகழ்வில் பிரபுதேவா

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நாளை மறுநாள் (நவம்பர் 22ஆம் தேதி) படம் வெளியாகும் நிலையில், இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நடிகை அபிராமி பேசும்போது, “மிகவும் எளிமையான கதை இது. நம்முடைய டென்ஷன் எல்லாம் வீட்டில் வைத்துவிட்டு ரிலாக்ஸாக இந்தப் படம் பார்க்கலாம். மடோனா உள்ளிட்ட படத்தில் பணிபுரிந்த நாங்கள் நான்கு பெண்களுமே மகிழ்ச்சியுடன் இருந்தோம். பிரபுதேவா சார், ரோபோ சங்கர் உள்ளிட்ட அனைவருடனும் பணி புரிந்தது மகிழ்ச்சி” என்றார். நடிகர் ரோபோ சங்கர், “பிரபு மாஸ்டருடன் சேர்ந்து நடிப்பது ஜாலியாக இருக்கும். நாம் நடிப்பதையும் அவர் என்ஜாய் செய்வார். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்” என்றார்.நடிகை மடோனா செபாஸ்டியன் பேசும்போது “‘ஜாலியோ ஜிம்கானா’ ஒரு ஜாலியான படம். பிரபு மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சக்தி சிதம்பரம் சார் படம் இயக்குவதில் மாஸ்டர். அபிராமி, ரோபோ சங்கர் உள்ளிட்டப் பலருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

இயக்குநர் சக்தி சிதம்பரம், “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. அப்போதுதான், டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. இதற்கான ஸ்க்ரீன்பிளே எழுதுவது எளிது கிடையாது. டெட்பாடியாக மாஸ்டர் இருக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் மாஸ்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நன்றாக வருவதற்கு கதையைப் போலவே காசும் முக்கியம். தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு கதை ரொம்பவே பிடித்து விட்டது. நான் கேட்காமலேயே படத்திற்கு நிறைய அள்ளிக் கொடுத்தார்” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசும்போது, “இந்த மாதிரி கதையை ஒத்துக்கொண்டு தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். ராஜன் சாருக்கு நன்றி. இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னுடைய நண்பர் இப்போது. நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காக நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். அபிராமி சின்ன பொண்ணாக பார்த்திருக்கிறேன். இப்போது இன்னும் புத்திசாலியாக மாறியிருக்கிறார். மடோனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகன் – சக்தி பிரச்சினை இப்போது தான் எனக்கு தெரிய வந்திருக்கிறது. நிச்சயம் இதுபற்றி பேசுவோம்” என்றார்.







