சீனாவில் ‘பாம்பு ஆண்டு’
கொண்டாட்டத்தில் திளைக்கும் கோடிக்கணக்கான சீன மக்கள்

பெய்ஜிங், ஜன.29; சீனாவில், டிராகன் ஆண்டு முடிந்து ‘பாம்பு ஆண்டு’ பிறந்துள்ளதை குறிக்கும் வகையில் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சீனப் புத்தாண்டின் தேதி பாரம்பரிய சீன நாட்காட்டி, சூரிய, சந்திர மற்றும் பிற சுழற்சிகளை இணைக்கும் சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் தேதிகள் பொதுவாக ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை இருப்பதுண்டு.
டிராகன் ஆண்டு முடிந்து பாம்பு ஆண்டு பிறப்பு

அந்த வகையில், டிராகன் ஆண்டு முடிவடைந்து பாம்பு ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதனை வசந்த விழா என்று அந்நாட்டவர் அழைக்கின்றனர். புத்தாண்டு பிறந்திருப்பதை சீன மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான சீனர்கள் கொண்டாட்டம்

சீனா மட்டுமின்றி, ஹாங்காங், மக்காவ், தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரீசியஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான சீன மக்கள் ‘பாம்பு ஆண்டு’ கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.
சீனப் புத்தாண்டு உலகெங்கிலும் உள்ள மிக முக்கிய பண்பாட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாகப் கருதப்படுகிறது. இன்று தொடங்கியுள்ள பாம்பு ஆண்டு கொண்டாட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீடிக்கும்.







