‘2 நாள்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்’

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துமனை தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டார். அவரது அடி வயிற்றில் ஏற்பட்ட வலி தொடர்பாக அவரை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள், தேவையான சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இதயத்தில் இருந்து பிரியும் பிரதான ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது; அறுவை சிகிச்சையின்றி ட்ரான்ஸ் கதீட்டர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தமனியில் (Aorta) ஸ்டன்ட் பொருத்தி டாக்டர் சாய் சதீஷ் வீக்கத்தை முற்றிலுமாக நீக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஜினிகாந்த் இப்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாளில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர். அதுவரை அவர், சிறப்பு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் என்று, தொடர்ச்சியாக அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.







