இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காதது ஏன்?
எம்.எஸ்.தோனி மீது குற்றம்சுமத்தும் மனோஜ் திவாரி

டெல்லி, ஜன.25; இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும், பிரபலமான விளையாட்டு என்னவோ கிரிக்கெட் தான். அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் கொட்டிக் கிடக்கும் திறமையான வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேர்வாளர்களின் கண்ணில் பட்டு, அதன்பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
“வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பு”

அதனால் தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது கடினமானது. வாய்ப்பு கிடைத்தாலும் அதனை தக்கவைத்துக் கொள்வது அதைவிட கடினமானது.
சில சமயம் நன்றாக விளையாடினால் கூட அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. காரணம் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை அல்லது புரிவதில்லை.
நீண்டகாலம் காத்திருந்த மனோஜ் திவாரி

அந்த வரிசையில் இடம்பிடித்த வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி.
2006-2007-ல் ரஞ்சி கோப்பையில் விளையாடியபோது அவரது சராசரி 99.50ஆக இருந்தது. ஆனாலும், காயம் காரணமாக சர்வதேச அளவில் அறிமுகம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
காத்திருப்புக்குப் பின்னர், 2008-ல் இந்திய அணியில் இடம்பிடித்தபோது திவாரிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.
சதமடித்தும் கழற்றிவிடப்பட்டார்..!

சிறிது காலத்திற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டில் சென்னையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை அவர் பதிவு செய்தார்.
ஆனாலும், அந்தப் போட்டிக்கு பின்னர் பல மாதங்களுக்கு பார்வையாளர் மாடத்திலேயே அவர் அமர வைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக மனோஜ் திவாரியின் கிரிக்கெட் வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
“நன்றாக விளையாடாதவர்களுக்கு வாய்ப்பு..!”

“அப்போதைய காலக்கட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் சதமடிக்கவில்லை; சரியாக விளையாடவும் இல்லை; ஆனால், நான் கழற்றிவிடப்பட்டேன்” என்று வேதனையை வெளிப்படுத்துகிறார், திவாரி.
“சதமடித்த ஒரு வீரருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனில், அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள அந்த வீரருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், என் விசயத்தில் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது” என்றும் திவாரி கூறுகிறார்.
தோனி மீது திவாரி குற்றச்சாட்டு

அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி தான் இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறார், மனோஜ் திவாரி.
கபில்தேவ் காலத்தில் அவர்தான் வீரர்களை தீர்மானம் செய்தார், கவாஸ்கர் காலத்திலும் அவர்தான் வீரர்களை தீர்மானித்தார், அதேபோன்ற நடைமுறைதான் தோனி காலத்திலும் இருந்தது எனக்கூறுகிறார், திவாரி.
இன்று நிலைமை மாறிவிட்டது: மனோஜ் திவாரி

“ஆனால், இன்றையக் காலக்கட்டத்தில் நிலைமை மாறிவிட்டது, இந்திய அணியின் தலைமைத் தேர்வாளரால் ஒரு வலுவான முடிவை எடுக்க முடியும்; அவருக்கும், பயிற்சியாளருக்கும் முரண் ஏற்பட்டால், ஒரு வீரரை அணியில் சேர்க்க முடியாது” என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட மனோஜ் திவாரி தற்போது மேற்குவங்க மாநில விளையாட்டுத்துறை இணையமைச்சராக உள்ளார்.
இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு மகேந்திர சிங் தோனி தான் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.







